மகத காண்டம்
ADVERTISEMENTS
மகத காண்டம்
வாசவதத்தையை நினைத்து உதயணன் வருந்துதல்
சயந்தியின் எல்லைவிட்டுச் சாலவு மகதநாட்டுக்கு
இயைந்துநன் கெழுந்துசென்றே இரவியின் உதய முற்றான்
நயந்தனன் தேவிகாதனன் மனத்தழுங்கிப் பின்னும்
வியந்து நல்லமைச்சர் தேற்றவெங்கடும் கானம் புக்கான்.
151
ADVERTISEMENTS
செத்தநற்தேவி தன்னைத் திருப்பவு மீட்கலாமென்று
அத்திசை முன்னிநல்ல வருவழிப்பட்டுச் செல்ல
அத்தியும் பிணையுமேக வாண்மயிலாடக் கண்டு
வந்தவன் கவிழ்ந்துரைக்கு மனனமை மனையையோர்ந்தே.
152
ADVERTISEMENTS
உதயணன் மகதநாடு அடைதல்
கோட்டுப்பூ நிறைந்திலங்குங் கொடிவகைப் பூவுங்கோலம்
காட்டு நந்தேவியென்று கால்விசைநடவா மன்னன்
காட்டினன் குன்றமேறிக் கானகங்கழிந்து போந்து
சேட்டிளஞ் சிங்க மன்னான் திருநிறைமகதஞ் சேர்ந்தான்.
153
அனைவரும் இராசகிரி நகர பூஞ்சோலையில் தங்குதல்
மருவிய திருவினானம் மகதவர்க் கிறைவனாமம்
தருசகனென்னு மன்னன்றானை வேற்றலைவன் மாரன்
இருந்தினி துறையுமிக்க விராசநற்கிரியந் தன்னிற்
பொருந்திச் சென்ன கர்ப்புறத்திற் பொலிவுடனிருந் தானன்றே.
154
காகதுண்ட முனிவனிடம் வயந்தகன் தங்கள் சூழ்ச்சி பற்றிக் கூறுதல்
காமநற்கோட்டஞ் சூழக் கனமதில் இலங்கும் வாயிற்
சோமநற்றாபதர்கள் சூழ்ந்தமர் பள்ளி தன்னில்
நாமநல் வயந்த கன்னு நன்றறி காக துண்ட
மாமறையாளற் கண்டு வஞ்சகஞ் செப்பினானே.
155
காகதுண்ட முனிவர் உதயணனிடம் உரைத்தல்
திருநிறை மன்னன் தன்னைச் சீர் மறையாளன் கண்டே
இருமதியெல்லை நீங்கியிப்பதியுருப்ப வென்றும்
தருவநீயிழந்த தேவி தரணியிங்கூட வென்ன
மருவியங்கிருக்குமோர் நாண் மகதவன் தங்கை தானும்.
156
பதுமாவதியும் உதயணனும் காமுறுதல்
பருவமிக்கிலங்குங் கோதைப் பதுமை தேரேறிவந்து
பொருவில் காமனையே காணாப் புரவலற் கண்டுகந்து
மருவும் வாசவதத்தை தான் வந்தனளென்றுரைப்பத்
திருநகர் மாதுகண்டு திகைத்துளங் கவன்று நின்றாள்.
157
உதயணனும் பதுமாவதியும் களவுமணம் செய்தல்
யாப்பியாயினியாளென்னும் அவளுடைத் தோழி சென்று
நாப்புகழ் மன்னற்கண்டு நலம்பிறவுரைத்துக் கூட்டக்
காப்புடைப் பதுமையோடுங் காவலன் கலந்து பொன்னின்
சீப்பிடக்கண் சிவக்குஞ் சீர் மங்கை நலமுண்டானே.
158
உதயணன் அமைச்சர்களிடம் வினவுதல்
எழில்பெறு காமக்கோட்டத் தியற்கையிற் புணர்ந்துவந்து
வழிபெறும மைச்சரோடு வத்தவனினிய கூறும்
மொழியமிர் தந்நலாளை மோகத்திற் பிரியேனென்னத்
தொழுதவர் பெறுக போகந் தோன்றனீயென்று சொன்னார்.
159
பதுமாவதியுடன் உதயணன் கன்னிமாடம் புகல்
மாட்சிநற் சிவிகையேறி மடந்தை தன்னோடும் புக்குத்
தாழ்ச்சியின் மாளிகைக்குட் டக்கவண் மனங்குளிர்ப்பக்
காட்டினன் வீணை தன்னைக்காவலன் கரந்திருப்ப
ஓட்டிய சினத்தனாய வுருமண்ணுவிதனைச் செய்யும்.
160
அமைச்சன் உருமண்ணுவாவின் உரை
ஆகியதறிந்து செய்யு மருளுடை மனத்தனான
யூகியங்குஞ்சை தன்னையுற்றருஞ் சிறை விடுக்கப்
போக நற்றேவியோடும் போந்ததுபோல நாமும்
போகுவமன்னன் மாதைப் புதுமணம் புணருவித்தே.
161
அமைச்சன் உருமண்ணுவாவின் செயல்
உருமண்ணுவா வனுப்ப வுற்றமுந்நூறு பேர்கள்
மருவியவிச்சை தன்னான் மன்னவன் கோயிறன்னுள்
மருவினர் மறைந்துசென்றார் மன்னவன்றாதை வைத்த
பெருநிதி காண்கிலாமற் பேர்க்குநர்த் தேடுகின்றான்.
162
உதயணன் மகத மன்னன் தருசகனுடன் நட்பு கொள்ளல்
யானரிந் துரைப்பனென்றே யரசனைக்கண்டு மிக்க
மாநிதிகாட்டி நன்மை மகதவனோடுங் கூடி
ஊனமில் விச்சை தன்னாலுருமண்ணுப் பிரிதலின்றிப்
பானலங்கிளவி தன்னாற் பரிவுடனிருக்கு நாளில்.
163
சங்க மன்னர்கள் ஏழுவரின் படையெடுப்பு
அடவியாமரசன் மிக்கவயோத்தியர்க் கிறைவன் றானைப்
படையுறு சாலியென்பான் பலமுறு சத்தியென்பான்
முடிவிரிசிகையன் மல்லன் முகட்டெலிச் செவியனென்பான்
உடன்வருமெழுவர் கூடியொளிர் மகதத்து வந்தார்.
164
மகதத்தை அழிக்கத் துவங்குதல்
தருசகற் கினிதினாங்கடரு திறையிடுவ தில்லென
நெரியென வெகுண்டு வந்தேயினிய நாடழிக்கலுற்றார்
தருசகராசன் கேட்டுத் தளரவப் புறத்தகற்ற
உருமண்ணுவா மனத்திலு பாயத்திலுடைப்பனென்றான்.
165
அமைச்சன் உருமண்ணுவாவின் சூழ்ச்சி
கள்ள நல்லுருவினோடுங் கடியகத்துள்ளே யுற்ற
வள்ளலை மதியிற் கூட்டி வாணிக வுருவினோடு
தெள்ளிய மணிதெரிந்து சிலமணி மாறப்போந்து
பள்ளிப்பாசறை புகுந்து பலமணி விற்றிருந்தார்.
166
மன்னன் வீர மகதத்திற்குக் கேளாத்தம்
இன்னு ரைகளியல்பின் வரவரத்
துன்னு நாற்படை வீடு தோன்றிரவிடை
உன்னினர்கரந் துரைகள் பலவிதம்
167
பகைவர் ஐயுற்று ஓடுதல்
உரையு ணர்ந்தவ ருள்ளங் கலங்கிப்பின்
முரியும் சேனை முயன்றவ ரோடலிற்
றெருளினர் கூடிச் சேரவந் தத்தினம்
மருவி யையம் மனத்திடை நீங்கினார்.
168
பகைவர் கூடி விவாதித்தல்
இரவு பாசறை யிருந்தவர் போனதும்
மருவிக் கூடியே வந்துடன் விட்டதும்
விரவி யொற்றர்கள் வேந்தற் குரைத்தலின்
அரசன் கேட்டுமிக் கார்செயலென்றனன்.
169
அமைச்சன் உருமண்ணுவா மன்னன் தருசகனைக் கண்டு உண்மை உரைத்தல்
வார ணிக் கழல் வத்தவன் றன்செயல்
ஓரணி மார்பனுருமண்ணு வாவுமிக்
கேரணிய ரசருக் கியல் கூறலும்
தாரணி மன்னன் றன்னுண் மகிழ்ந்தனன்.
170
தருசகன் உதயணனை எதிர்கொண்டு வரவேற்றல்
ஆரா வுவகையுள் ளாகி யரசனும்
பேரா மினியயாழ்ப் பெருமகன் தன்னையே
சேரா வெதிர்போய்ச் சிறந்து புல்லினன்
நேரா மாற்றரை நீக்குவனானென்றான்.
171
படையெடுத்துச் சென்று உதயணன் பகைவரை வெல்லுதல்
உலம்பொருத தோளுடை யுதயண குமரனும்
நலம்பொருத நாற்படையு நன்குடனே சூழப்போய்ப்
புலம்பொருத போர்ப்படையுட் பொருதுதவத் தொலைத்துடன்
நலம்பெறத் திறையுடனரபதியு மீண்டனன்.
172
உதயணன் பதுமாவதி மணம்
வருவவிசை யத்துடன் வத்தவற் கிறைவனைத்
தருசகன் எதிர்கொண்டு தன்மனை புகுந்துபின்
மருவநற் பதுமையாமங்கை தங்கை தன்னையே
திருநிறைநல் வேள்வியாற் செல்வற்கே அளித்தனன்.
173
தருசகன் உதயணனுக்கு படை அளித்து உதவுதல்
புதுமணக் கோலமிவர் புனைந்தன ரியற்றிப்பின்
பதியுடையை யாயிரம் பருமதக் களிற்றுடன்
துதிமிகு புரவிகள் தொக்கவிரண் டாயிரம்
அதிர்மணி யாற்றுந்தோ ராயிரத் திருநூறே.
174
அறுபதினொண் ணாயிர மானபடை வீரரும்
நறுமலர்நற் கோதையர் நான்கிருநூற் றிருபதும்
பெறுகவென் றமைத்துடன் பேர் வருட நாரியும்
உறுவடிவேற் சததியு முயர் தரும தத்தனும்.
175
சத்திய காயனுடன் சாலவு மமைச்சரை
வெற்றிநாற் படைத்துணை வேந்தவன்பிற் செல்கென்று
முற்றிழை யரிவைக்கு முகமலரச் சீதனம்
பற்றியன்பினால் அளித்துப் பாங்குடன் விடுத்தனன்.
176
வெல்லுமண்ண லைமிக வேந்தனன்ன யஞ்சில
சொல்லிநண்பினாலுறைத்துத் தோன்றலை மிகப்புல்லிச்
செல்கென விடுத்தரச் செல்வனங்குப் போந்தனன்
எல்லைதன்னா டெய்திப்பினினியர் தம்பி வந்தனர்.
177
பிங்கலனும் கடகனும் உதயணனை அடைதல்
பிங்கல கடகரெனப் பீடுடைக் குமரரும்
தங்குபன்னீ ராயிரந் தானையுடை வீரரும்
அங்குவந்தவ் வண்ணலை அடிவணங்கிக் கூடினர்
பொங்குபுரங் கௌசாம்பியிற் போர்க்களத்தில் விட்டனர்.
178
வருடகாரனிடம் உதயணன் தன் சூழ்ச்சி உரைத்தல்
வருடகாரனை அழைத்து வத்தவனியம்புமிப்
பருமிதநற் சேனையுள்ள பாஞ்சால ராயனிடம்
திருமுடி யரசரைத் திறத்தினா லகற்றெனப்
பொருளினவன் போந்தபின்பு போர்வினை தொடங்கினர்.
179
உதயணன் ஆருணி அரசன் போர்
அமைச்சனுஞ்சென் றவ்வண்ண மதிர்கழனல் வேந்தரைச்
சமத்தினி லகற்றினன் சாலவும்பாஞ் சாலனும்
அமைந்த நாற் படையுடனமர்ந்துவந் தெதிர்த்தனன்
அமைத்திருவர் விற்கணைக ளக்கதிர் மறைத்தவே.
180
போர்க் காட்சிகள்
விரிந்த வெண்குடை வீழவும் வேந்தர் விண்ணுவ வேறவும்
பரிந்து பேய்க்கண மாடவும் பல நரிபறைந் துண்ணவும்
முரிந்த முண்டங்க ளாடவும் முரிந்த மாக்களி றுருளவும்
வரிந்த வெண்சிலை மன்னவன் வத்த வன்கண்கள் சிவந்தவே.
181
உதயணன் ஆருணி மன்னனைக் கொல்லுதல்
மாற்ற வன்படை முறிந்தென மன்ன வன்படையார்த்திடத்
தோற்ற மன்னன்வந் தெதிர்த்தனன் றூய காளைதன் வாளினால்
மாற்ற லன்றனைக் கூற்றுண வண்மை யில்விருந் தார்கென
ஏற்ற வகையினி லிட்டனனிலங்கு வத்தவ ராசனே.
182
உதயணன் கோசம்பி நகருக்குள் புகுதல்
பகையறவேயெ றிந்துடன் பாங்கிற் போர்வினை தவிர்கென
வகையறவேபடுகளங்கண்டு நண்ணிய மற்றது
தொகையுறுந்தன தொல்படை சூழ வூர்முக நோக்கினன்
நகையு றுந்நல மார்பனு நகர வீதியில் வந்தனன்.
183
உதயணன் அரண்மனை புகுதல்
மாடமா ளிகைமிசை மங்கையரு மேறிமீக்
கூடிநின் றிருமருங்குங் கொற்றவனை வாழ்த்தினார்
பாடலவர் படித்திடப் பலகொடி மிடைந்தநல்
ஆடகநன் மாளிகை யரசனும் புகுந்தனன்.
184
உதயணன் திருமுடி சூடுதல்
படுகளத்தி னொந்தவர்க்குப் பலகிழிநெய் பற்றுடன்
இடுமருந்து பூசவு மினிப்பொரு ளளித்தபின்
தொடுகழ லரசர்கள் சூழ்ந்தடி பணிந்திட
முடிதரித் தரசியன் முகமலர்ந்து செல்லுநாள்.
185